ஆளுநர் சொல்லி இருப்பது அதிக பிரசிங்கதனமானது – வைகோ

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர், ‘தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே ஈவு இரக்கமற்ற, மூர்க்கத்தனமான தான்தோற்றிதனமான காரியங்களை செய்கின்ற ஆளுநர், ஆர்.என்.ரவி என்று கடுமையாக சாடினார்.

மேலும், முதல்வருக்குதான் யாரை அமைச்சராக்க வேண்டும் என்ற அதிகாரம் இருக்கிறது என தெரிவித்த அவர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்காக்களை பிரித்து கொடுத்து இருப்பதை ஏற்று கொள்ள முடியாது என ஆளுநர் சொல்லி இருப்பது அதிக பிரசிங்கதனமானது. அயோக்கியதனமானது என காட்டமாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் இந்த ஆளுநர் இருக்கின்ற வரையில் ஜனநாயகத்தை எப்படி சீர்குலைக்க முடியுமோ, ஆட்சியை எப்படி சீர் குலைக்க வைக்க முடியுமோ என்று செயல்படுகிறார். பாஜகவின் ஏஜென்டாக, உளவாளியாக ஆளுநர் செயல்படுகின்றார். அவருக்கு இருக்கின்ற அதிகாரத்துக்கு விரோதமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது போல ஆளுநர் செயல்படுகிறார். மக்கள் தேர்வு செய்தது மு.க.ஸ்டாலினைதான். ஆர்.என்.ரவியை இல்லை என தெரிவித்தார்.

ஆளுநர் ரவி மத்திய அரசின் ஒரு வேலைக்காரர். ஏஜென்ட். அவ்வளவுதானே தவிர முதல்வரல்ல. ஒன்றிய அரசு அனைத்து இடங்களிலும் பாஜகவைக் கொண்டு வந்து கைப்பற்ற நினைக்கின்றனர். சர்வாதிகார்தை நிலைநாட்ட மோடி அரசு முயற்சிக்கிறது. அதில் தோற்றுப் போவார்கள் என தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதைக் கண்டித்து இன்று மாலை கோவையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வைகோ இன்று காலை விமானம் மூலம் கோவை வந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.