அக்காவை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த இளைஞர்.. தட்டிக்கேட்ட தம்பி கொலை

ஆந்திரப் பிரதேச மாநிலம் பட்லா பகுதியில் உள்ள செருக்குப்பள்ளி ஊரை சேர்ந்தவர் 15 வயதான அமர்நாத். இந்த சிறுவன் 10ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், அருகே உள்ள ராஜாவுலு என்ற பகுதிக்கு தினமும் டியூஷன் வகுப்புக்கு சென்று வருகிறார்.

இந்த சிறுவனுக்கு 17 வயதில் சகோதரி உள்ளார். இவரை அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் தொடர்ச்சியாக பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். குறிப்பாக வெங்கடேஷ்வர் ரெட்டி என்ற 21 வயது இளைஞர் தான் அமர்ந்த்தின் சகோதரியை பின் தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளார். இதை சிறுவன் அமர்நாத் தட்டிக்கேட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை வேளை அமர்நாத் வழக்கம் போல தனது சைக்கிளில் டியூஷனுக்கு சென்றுள்ளார். அப்போது வெங்கடேஷ்வர் ரெட்டியும் அவருடன் சேர்ந்து மூன்று சிறார்களும் அமர்நாத்தை வழிமறித்து முற்றுகையிட்டுள்ளனர்.

வெங்டேஷ்வர் தன்னிடம் இருந்த பெட்ரோலை அமர்நாத்தின் மீது ஊற்றி அவர் மீது தீ வைத்துள்ளார். அமர்நாத் உடலில் நெருப்பு பற்றி எரியவே அவரின் கூக்குரல் கேட்டு உள்ளூர்வாசிகள் அங்கு வந்து தீயை அணைத்து குண்டூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

ஆனால், படுகாயமடைந்த அமர்நாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக அமர்நாத்தின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் வெங்கடேஷ்வர் ரெட்டி உள்ளிட்டோர் மீது கொலை மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெங்கடேஷ்வர் ரெட்டியை கைது செய்து விசாரணை நடைபெறுவதாக அப்பகுதி காவல் கண்காணிப்பாளர் வகுல் ஜிந்தால் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.