மயக்க மருந்தால் இரண்டரை வயது குழந்தை பரிதாப மரணம்!

மயக்க மருந்து வழங்கப்பட்ட இரண்டரை வயது குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் குறித்த குழந்தை அனுமதிக்கப்பட்டது.

இதன்போது சத்திர சிகிச்சைக்காக மயக்க மருந்தினை உட்செலுத்த வேண்டும் என்று வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதற்கமைய உட்செலுத்தப்பட்ட மயக்க மருந்து காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளது.

இதனை வைத்தியசாலையின் வைத்தியர்கள் உறுதிப்படுத்தியதாக குறித்த குழந்தையின் தந்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்டது எனவும், இதனால் குழந்தை உயிரிழந்தது எனவும் குழந்தையின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னதாக இரண்டு தடவைகள் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு பெண்கள் மயக்கமடைவதற்காக வழங்கப்பட்ட மருந்தால் உயிரிழந்துள்ளனர்.

மகப்பேற்றுக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்ணொருவரும் மற்றுமொரு பெண்ணும் இவ்வாறு உயிரிழந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை உரிய முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று அரச மருந்தாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்தச் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.