“பெண்ணுறுப்பில் மிளகாய்ப் பொடி தூவி சித்ரவதை”.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசிக்கும் குறவர் சமூகத்தைச் சேர்ந்த 10 பேரை ஆந்திராவிலுள்ள சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூத்தலப்பட்டு காவல்நிலையத்தின் போலீசார் கைது செய்து, துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

அப்படி கைது செய்யப்பட்டவர்களில் 5 பெண்களும் ஒரு 7 வயது குழந்தையும் அடங்குவார்கள் என்று தமிழ் பழங்குடி குறவர் சங்கத்தின் மாநில தலைவர் ரமேஷ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சராயுவை பிபிசி தமிழ் தொடர்புகொண்டபோது, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி மற்றும் பெண் டிஎஸ்பி தலைமையில் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், சித்தூர் காவல்துறை எஸ்.பி ரிஷாந்த் ரெட்டியை பிபிசி தெலுங்கு சேவை தொடர்புகொண்டபோது, இதுகுறித்த தகவல் கிடைத்திருப்பதாகவும் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜூன் 7, 11, 12 ஆகிய தேதிகளில் கைது செய்யப்பட்ட குறவர் சமூகத்தைச் சேர்ந்த 10 பேரில் 8 பேர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஓர் இளம்பெண்ணும் ஓர் ஆணும் மட்டும் விடுவிக்கப்படவில்லை என்று அவர்களது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

சித்தூர் போலீசாரால் விடுவிக்கப்பட்ட 8 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

கடந்த ஜூன் 11ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான 7 வயது மகனின் தாய் பிபிசி தமிழிடம் பேசினார். “எனக்கு நடந்தது வேறு எந்தப் பெண்ணுக்கும் நடந்துவிடக்கூடாது என்பதால், எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளிப்படையாகச் சொல்கிறேன்,” என்று கண்ணீருடன் அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை அவர் விளக்கினார்.

“கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நான், என் கணவர், மாமியார், என் ஏழு வயது மகன் அனைவரும் இரவு 8 மணி வாக்கில் சாப்பிடுவதற்காக வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தோம்.

திடீரென இரண்டு ஜீப்களில் வந்த 6 போலீசார், அவரை விசாரிக்க வேண்டும் என்று சொல்லி, எனது கணவரையும் எங்களையும் கைகளைக் கட்டி இழுத்துச் சென்றார்கள்,” என்று கூறுகிறார்.

அவரது கணவர் மீது ஏற்கெனவே திருட்டு தொடர்பான சில வழக்குகள் உள்ள காரணத்தால், அவரை ஏதேனும் விசாரணைக்காக அழைக்க போலீசார் வந்திருக்கலாம் என்று குடும்பத்தினர் நினைத்துள்ளனர். ஆனால் தங்களையும் இழுத்துச் செல்லவே, ‘எங்களை ஏன் கூட்டிச் செல்கிறீர்கள்?’ என்று கேட்டதாகக் கூறுகிறார்கள்.

இருப்பினும், “அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் நால்வரையும் ஜீப்பில் ஏற்றிய போலீசார் மூச்சு விடவே சிரமப்படும் அளவுக்கு குழந்தை உட்பட அனைவரது முகத்தையும் கருப்புத் துணியால் மூடி வாகனத்தில் கொண்டு சென்றதாக” அவரும் அவரது மாமியாரும் கூறினார்.

இந்தச் சம்பவத்தின்போது ஒரு பெண் போலீஸ் உட்பட 6 போலீசார் வந்திருந்ததாகவும் சாதியைக் குறிப்பிட்டு ஆபாசமான வார்த்தைகளில் திட்டி தங்களை இழுத்துச் சென்றதாகவும் அவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இதற்கும் முன்னதாகவே ஜூன் 7ஆம் தேதியன்று குல்பர்காவில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அந்தப் பெண், போலீசார் செய்த சித்ரவதையைத் தாங்க முடியாமல் தான் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறுகிறார்.

“என்னை குல்பர்காவுக்கு வந்து 6 போலீசார் ஜூன் 7ஆம் தேதியன்று பிடித்துக் கொண்டு போனார்கள். அய்யப்பன் எங்கிருக்கிறார் என்று கேட்டு என்னை அடித்தார்கள். பிறகு திருடிய நகை எங்கு இருக்கிறது எனக் கேட்டு துன்புறுத்தினார்கள்,” என்கிறார்.

அதற்கு அடுத்த நாள், “நகையை வாங்கிக் கொடுக்குமாறு சொல்லி கால்களை அகற்றிப் பிடித்து, இரும்புக்கம்பியில் மிளகாய்ப் பொடியைத் தடவி, பிறப்புறுப்பில் குத்தி சித்ரவதை செய்தார்கள்” என்று அவர் கூறுகிறார்.

இந்தக் கொடுமைகளைத் தாங்க முடியாமல் கழிவறையில் கிடந்த பிளேடை எடுத்து கையை அறுத்துக்கொள்ளத் தான் முயன்றபோது, “மருத்துவரை வர வைத்து சிகிச்சையளித்து, சிறிது நேரம் இடைவெளிவிட்டு பிறகு மீண்டும் துன்புறுத்தத் தொடங்கியதாக” பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கூறுகிறார்.

“என் கழுத்தைத்தான் அறுத்துக் கொள்ள நினைத்தேன். ஆனால், என் 5 வயது மகன் கண்முன் வந்து போனதால் அந்தத் தைரியம் வரவில்லை. அதனால் கையை அறுத்துக்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.

அப்படி அழைத்துச் சென்ற போலீசார், பைப் குடோன் போன்ற ஒரு கட்டடம் உட்பட மூன்று வெவ்வேறு இடங்களில் மாற்றிமாற்றி வைத்து தங்களை அடித்து துன்புறுத்தியதாகவும் தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாகவும் இறுதியாக பிரச்னை ஆன பிறகு விடுவிக்கும் நேரத்தில்தான் தங்களை சித்தூரில் உள்ள பூத்தலப்பட்டு காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்ததாகவும் ஜூன் 11ஆம் தேதியன்று கைது செய்யப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் கூறுகிறார்.

என்னை மிரட்டி பாலியல் வல்லுறவு”
“திருடுன நகைய எந்தக் கடையில வெச்சுருக்க? அதை வாங்கிக் கொடு’ என்று சொல்லிச் சொல்லி, என் கணவரை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டு அடித்தார்கள். அடி தாங்க முடியாமல் அவர் அப்படியே சிறுநீர், மலம் அனைத்தையும் கழித்தபடி கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தார். சிறிதும் மனிதத் தன்மையே இல்லாமல் நடந்துகொண்டார்கள்,” என்கிறார் அவர்.

மேலும், “14ஆம் தேதியன்று இரவு தணிகாச்சலம் என்ற துணை ஆய்வாளர் என்னை தனியாக ஓர் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு செய்தார். அதற்கு மறுத்தபோது, நான் ஒத்துழைக்கவில்லை என்றால் என் கணவரை அடித்தே கொன்றுவிடுவதாக மிரட்டி என்னை வன்கொடுமை செய்தார்.

பிறகு அங்கு நடந்ததை வெளியில் கூறினாலும் என் கணவரைக் கொன்று விடுவதாக அவர் மிரட்டினார். அதற்குப் பயந்து அந்தக் கொடுமையை நான் என் கணவரிடம்கூட சொல்லவில்லை,” என்று குரல் நடுங்க, கண்ணீர் மல்கத் தெரிவித்தார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.