இராணுவ பஸ் மோதி தலை சிதைவடைந்து மூன்று வயது சிறுமி சாவு! – தாய் படுகாயம்.

இரணுவத்தினர் பயணித்த பஸ் ஒன்று, ஸ்கூட்டர் ஒன்றுடன் மோதியதில் ஸ்கூட்டரில் பயணித்த மூன்று வயது சிறுமி தலை சிதைவடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் தாயார் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சோக சம்பவம் பண்டாரகம பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது என்று பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம கூட்டுறவுச் சங்கத்தின் பிரதான காரியாலயத்தின் கணக்காளரான உயிரிழந்த சிறுமியின் தாயார், சிறுமியுடன் ஸ்கூட்டரில் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்த போது, பண்டாரகம கூட்டுறவுச் சங்க அலுவலகத்துக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

களுத்துறையில் இருந்து இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் பண்டாரகமவில் இருந்து கெஸ்பேவ நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது என்று பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

விபத்தையடுத்து சிறுமியும் அவரது தாயாரும் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் எனவும், எனினும் சிறுமி தலை சிதைவடைந்து ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave A Reply

Your email address will not be published.