கொலைச் சந்தேகநபர் ஒருவர் சுட்டுக்கொலை! – எஸ்.ரி.எப். மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டாராம்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 வயதுடைய கொலைச் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் எம்பிலிப்பிட்டிய, பனாமுர, வெலிக்கடையாய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபர், பல துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்களுடன் நேரடித் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் அவரைக் கைது செய்வதற்காக இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த நபர் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சந்தேகநபர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் முன்னாள் இராணுவச் சிப்பாய் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மினுவாங்கொடை பெஸ்டியன் மாவத்தை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் அம்பலாங்கொடையில் பிரதி அதிபர் ஒருவா் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் உள்ளிட்ட பல துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களுடன் நேரடித் தொடர்புடையர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.