டெலிகிராம் மோசடி கும்பலிடம் ரூ.25 லட்சம் பறிகொடுத்த நபர்!

இந்தியாவில் சில மாதங்களாகவே ஆன்லைன் இணைய மோசடிகள் பல்கி பெருகியுள்ளன. வங்கியில் இருந்து அழைக்கிறோம், லோன் தருகிறோம் என செல்போனில் ஓடிபி, லிங்குகளை அனுப்பி பணம் பறிக்கும் செயல்கள் அதிகம் நிகழ்ந்து வருகின்றன.

இப்படி இருக்க பிரபலமான டெலிகிராம் செயலி மூலம் ஒரு நபரிடம் மோசடி கும்பல் ரூ.25 லட்சம் பணம் பறித்துள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த சுபத்ரா கோஷ் என்ற நபர் தான் இந்த இணைய மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளார். இவருக்கு சில நாள்களுக்கு முன்னர் டெலிகிராம் மூலம் ஆன்லைன் வொர்க் ப்ரம் ஹோம் வேலை தருகிறோம் என மெசேஜ் வந்துள்ளது.

இதை பார்த்த ஆசையில் நம்பி அழைப்பை ஏற்றுள்ளார். முதலில் நீங்கள் ரூ.10,000 பணம் செலுத்துங்கள் நாங்கள் சின்ன சின்ன வேலை தருவோம் அதை செய்தால் ரூ.18,000ஆக திரும்ப கிடைக்கும் என்றுள்ளனர். இவரும் முதலில் 10,000 ரூபாய் பணம் அனுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து இவருக்கு 30 லிங்குகளை அனுப்பி 5 ஸ்டார் ரேட்டிங் இதற்கு போடுங்கள் என்றுள்ளனர் மோசடி கும்பல். இவரும் அதை செய்யவே பதிலுக்கு ரூ.18,000 வங்கிக் கணக்கிற்கு வந்துள்ளது.

இதை பார்த்த நம்பிக்கை அடைந்த கோஷ், அதிக லாபம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் தொடர்ச்சியாக தனது பணத்தை மோசடி கும்பலிடம் முதலீடு செய்துள்ளார். இவ்வாறு ஒரு கட்டத்தில் சுபத்ரா கோஷ் 25 லட்சத்து 29 ஆயிரத்து 176 ரூபாய் முதலீடு செய்துள்ளார். ஆனால், இவர்கள் அந்த பணத்தை முடக்கி வைத்து எடுக்க விடாமல் தடுத்துள்ளனர்.

மேலும், ரூ.12 லட்சம் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் இல்லை என்றால் வங்கிக் கணக்கை ஹேக் செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த சுபத்ரா கோஷ் போலீசாரை நாடி புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.