சரத் வீரசேகரவின் வில்லங்கப் பேச்சுக்கு எதிராக கல்முனை சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பு.

நீதிமன்றப் பணிப்புறக்கணிப்பில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் இன்று ஈடுபட்டது.

அம்பாறை மாவட்டம், கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில் ஒன்றுகூடிய சட்டத்தரணிகள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அத்துடன் பல்வேறு வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள பௌத்த கட்டுமானங்களைப் பார்வையிட முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அண்மையில் சென்றிருந்தார். அப்போது தனது குழுவினருடன் அங்கு வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, தேவையில்லாமல் மூக்கை நுழைத்து வாங்கிக் கட்டினார். அரசியல்வாதிகள் நீதிமன்ற விசாரணையில் மூக்கை நுழைக்கக்கூடாது என எச்சரித்து வீரசேகரவை அங்கிருந்து நீதிபதி அகற்றியிருந்தார்.

இதனால் கொதிப்படைந்த வீரசேகர அண்மையில் நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி, தமிழ் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளையும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் இன்று புறக்கணித்திருந்தது.

Leave A Reply

Your email address will not be published.