மதுபோதையில் லுங்கி, பனியனோடு பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர்!

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிக்கு மதுபோதையுடன் வந்து ஆட்டம் போட்டு ரகளை செய்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாட்டில் மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் ஒன்று பீகார். இங்கு மதுவிலக்கு அமலில் உள்ளதால் அடிக்கடி கள்ளசாராய மரணங்கள் நிகழ்கின்றன. இப்படி மதுவிலக்கு கெடுபிடியாக உள்ள பீகாரில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்த பகீர் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்மாநிலத்தின் முசாபர்பூரில் உள்ள பஹர்பூரில் உள்ள நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் உமேஷ் தாகூர். இவர் நேற்று காலை பள்ளிக்கு லுங்கி பனியனுடன் வருகை தந்துள்ளார். இப்படி ஒரு கோலத்தில் தலைமை ஆசிரியர் வந்ததை பார்த்து ஆசிரியர்களும் மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

தீவிர மதுபோதையில் இருந்த ஆசிரியர் உமேஷ் வகுப்பறைக்குள் பாட்டுப்பாடியும், நடனமாடியும் கூத்தும் ரகளையுமாக இருந்துள்ளார். அத்தோடு நிற்காமல் பள்ளியில் இருந்த பெண் ஆசிரியைகளிடம் அத்துமீறி நடந்து கொண்டு அட்டூழியம் செய்துள்ளார்.

ஒருகட்டம் வரை பொறுத்து பார்த்த ஆசிரியர்களும் மாணவர்களும் உமேஷை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் அழைத்துள்ளனர். பள்ளிக்கூடத்திற்கு விரைந்த போலீசார் ஆசிரியர் உமேஷை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மதுபோதைக்கு அடிமையான உமேஷ் அடிக்கடி பள்ளிக்கு குடித்துவிட்டு வருகை தந்துள்ளார். இவரை திருத்த பல முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. இந்த சூழலில் தான் நேற்று உமேஷ் உச்சக்கட்டத்திற்கு சென்று பெரும் ரகளை செய்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.