சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை வந்தது ஏன்?

இன்று (14) சென்னையிலிருந்து மாலைதீவுக்கு செல்லும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குறித்த விமானம் இலங்கை ஊடாக செல்லும் நிலையில், இலங்கை விமான நிலையத்தில் ஒரு சில மணித்தியாலங்கள் தங்க நேரிட்டுள்ளது. அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறிது நேரம் தங்கிச் சென்றார்.

அவர் 07/14 மதியம் 11.30 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-122 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின், ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ரஜினி காந்த் அவர்களை கட்டுநாயக்க விமான நிலைய சிறப்பு விருந்தினர் அறைக்கு அழைத்து மலர் செண்டு கொடுத்து அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தது.

இது தொடர்பான புகைப்படங்களையும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தமது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது.

அதில் ஒரு புகைப்படத்தில் விமானத்திற்கு முன்னால் மிக எளிமையான முறையில் சிறிய பயணப்பொதியுடன் சிரித்தவாறு போஸ் குடுத்தவாறு நிற்கின்றார்.

மற்றொரு புகைப்படத்தில் வரவேற்கப்பட்ட அவர், இரு விமானப் பணிப்பெண்களுக்கு நடுவில் மலர்செண்டுடன் நிற்கின்றார்.

குறித்த பயணம் நினைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக, நிறுவனம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் தமது விமானத்தில் பயணித்தமைக்கு நன்றி தெரிவித்துள்ள ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம், தமது விமானத்தில் அவர் பயணிப்பதை ஒரு கௌரவமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் நடித்து , 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தீ திரைப்பட படப்பிடிப்புக்காக வெகு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பதோடு, குறித்த திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த திரைப்படத்தில் இடம்பெறும் பாடலொன்றின் வா நூ காவாலய்யா என்ற பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்று அண்மையில் வெளியாகியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.