அரசில் இருப்பதற்குப் பொருத்தமற்றவரே வீரசேகர! – அமைச்சர் மனுஷ தெரிவிப்பு.

“குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் சரத் வீரசேகர முற்றுமுழுதாக இனவாதக் கருத்தையே வெளிப்படுத்துகின்றார். அரசில் இருப்பதற்குப் பொருத்தமற்ற ஒருவரே சரத் வீரசேகர.”

– இவ்வாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“சரத் வீரசேகர போன்றவர்கள் அரசில் அங்கம் வகிக்கத் தகுதியற்றவர்கள். இவர்களையெல்லாம் கொண்டுதான் இந்த அரசு இயங்குகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது குறித்த தெளிவில் இருக்கின்றார்.

வடக்கிலும் தெற்கிலும் இனவாதக் கருத்துக்களை பேசுபவர்கள் முதலில் அதனை நிறுத்த வேண்டும். குறிப்பாக இனவாதக் கருத்தைக் கொண்ட சரத் வீரசேகர போன்றவர்கள் தமது மனநிலையை மாற்றவில்லையெனில் எமது நாடு 2047ஆம் ஆண்டளவில்கூட அபிவிருத்தி அடையாத நாடாகவே காணப்படும்.

நான் தமிழ் மொழி பேசாதமை எனது குற்றமல்ல. எமது மூதாதையர்கள் ஆற்றிய பிழையே ஆகும். 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனைத் தேசிய மொழியாக அங்கீகரித்து பிறமொழிகளை புறக்கணித்தார்கள். இதன்மூலம் எம்மால் ஏனைய மொழிகளைக் கற்க முடியாது போனது. எமது நாட்டின் இனப்பிரச்சினை தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

மனித உரிமைசார் பிரச்சினைகளை நாம் இழுத்தடித்து கொண்டு செல்லமுடியாது. அதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அத்துடன், வடக்கு – கிழக்குப் பகுதிகளில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது கவனம் செலுத்தி வருகின்றார்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.