மனநோயாளி போல் செயற்படும் சரத் வீரசேகரவை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்!

“தமிழர்களுக்கு 13ஐ வழங்க வேண்டாம், சமஷ்டியை வழங்க வேண்டாம் எனக் கூறிக்கொண்டு மனநோயாளி போல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர செயற்பட்டு வருகின்றார். எனவே, தமிழ் மக்களை சீண்ட வேண்டாம் என அவரை எச்சரித்துக்கொள்கின்றேன்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மனநோயாளி போல் செயற்படும் சரத் வீரசேகரவை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்றுள்ளார். அவர் எங்களை அழைத்துப் பேச்சு நடத்தியபோது 13 இல் பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது என்ற தொனியில் பேசினார். சமஷ்டி முறையிலான தீர்வே எமது விருப்பமாகும்.

13 ஆவது திருத்தச் சட்டம் என்பது அரசமைப்பில் உள்ள ஒரு விடயம். எனவே, அரசமைப்பை மீறுவதற்கு ஜனாதிபதிக்குக் கூட அருகதை இல்லை. ஆனால் ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அரசமைப்பை மீறும் பாதகச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தீர்வை வழங்குவார்களா என்ற ஐயப்பாடு எம்முள் உள்ளது.

போர்க்காலத்தில் சமையல் அறையில் இருந்த சரத் வீரசேகர, தற்போது மனநோயாளி போல் செயற்பட்டு வருகின்றார். குருந்தூர்மலை விவகாரத்திலும் மூக்கை நுழைக்கின்றார். சரத் வீரசேகர என்பவர் யார்? அவரை இயக்குவது யார்? அமெரிக்கத் தூதுவர், கனேடிய தூதுவர் எல்லாம் நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்துகின்றார். இந்தியாவையும் சாடுகின்றார். அந்த மனநோயாளியைச் சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.