மகாராஷ்ட்ரா நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த கிராமம்… 18 பேர் மரணம்

மகாராஷ்டிரா நிலச்சரிவில் ஒரு கிராமமே புதையுண்டு 18 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி என்ற மலை கிராமத்தில், புதன் கிழமையன்று நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அந்த கிராமமே புதையுண்டு, வீடுகள் தரைமட்டமாகின. தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் 16 பேரை சடலமாகவும் 20க்கும் மேற்பட்டோரை காயங்களுடனும் மீட்டனர்.மேலும், 100க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் சிக்கி உள்ள நிலையில், மீண்டும் பெய்த மழையால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. வானிலை சற்று இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து, மீண்டும் மீட்புப்பணிகள் தொடங்கப்பட்டன.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காவல்துறை மற்றும் மருத்துவக் குழுக்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன. மீட்புப் பணிகளில் உள்ளூர் மற்றும் மலையேற்ற வீரர்களும் ஈடுபட்டனர்.நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி, மலையின் உச்சியில் உள்ளதாலும், மழை காரணமாக மலைப்பாதைகள் வழுக்குவதாலும் ஜேசிபி உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாமல் மீட்புப் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் இடைவிடாமல் பருவமழை பெய்து வருகிறது. பஞ்சகங்கா நதியின் நீர்மட்டம் உயர்ந்ததால் கோலாப்பூரில் வெள்ளம் புகுந்தது.ஒடிசாவின் மல்கங்கிரி, கோராபுட், நவ்ரங்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், சூத்ரபாதா, மங்ரோல், கிர் சோம்நாத் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.

உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசத்திலும் மீண்டும் கொட்ட தொடங்கிய உள்ள கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மணாலியில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சாலைகளில் ஆறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.குலுவில் பெய்த தொடர் மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட்டின் சாமோலி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, கெய்ர்சைன்-கர்ன்பிரயாக் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால், கெய்ர்சைனில் இருந்து கர்ன்பிரயாக் மற்றும் நைனிடால் செல்லும் மக்கள் சாலையின் இருபுறமும் சிக்கித் தவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.