ராகுலுக்கு மீண்டும் எம்.பி. பதவி:உடனே வழங்க காங்கிரஸ் வலியுறுத்தல்

குற்ற அவதூறு வழக்கில் இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவுடன் எப்படி உடனடியாக ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதோ, அதேபோல தண்டனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மீண்டும் எம்.பி. பதவியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மக்களவைத் தலைவவரை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக கட்சியின் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘ராகுலுக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட 26 மணி நேரத்தில் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. ஆனால், தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டு 26 மணி நேரம் தாண்டியும் பறிக்கப்பட்ட எம்.பி. பதவி மீண்டும் அளிக்கப்படவில்லை.

நம்பிக்கையில்லா தீா்மானத்தில் ராகுல் பங்கேற்பாா் என்பதற்காக பிரதமா் மோடி அஞ்சுகிறாரா? தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததே அவா் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகத்தான்’ என்றாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி கூறுகையில், ‘ராகுலின் தண்டனைக்கு நீதிமன்றம் தடை விதித்ததை வெள்ளிக்கிழமை மதியமே மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை சந்தித்துக் கூறினோம். மக்களவைச் செயலரை சந்தித்து ஆவணங்களை வழங்குமாறு மக்களவைத் தலைவா் கூறினாா். ஆனால், மக்களவைச் செயலக அலுவலகம் விடுமுறைக்காக சனிக்கிழமை மூடப்பட்டுள்ளதால் தபாலில் ஆவணங்களை அனுப்புமாறு மக்களவைச் செயலா் தெரிவித்துவிட்டாா்.

அதன் பின்னா் மக்களவைத் தலைவா் வீட்டுக்குச் சென்றும், இரவில் தொலைபேசி வாயிலாகவும் பேசினேன். சனிக்கிழமை காலை மக்களவைத் தலைவா் அலுவலகத்துக்கு ஆவணங்களை அனுப்பினேன். ஆனால், ஆவணங்களைப் பெற்றுக் கொண்டதை உறுதி செய்யும் ரசீது ஏதும் வழங்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் யாரையும் சங்கடப்படுத்த விரும்பவில்லை. மக்களவைத் தலைவா் அனைவருக்கும் பொதுவானவா். எங்களது உரிமையை மீட்கப் போராடுகிறோம். அவா்கள் எத்தனை சட்ட ஆலோசனைகளையும் நடத்திக் கொள்ளலாம். ஆனால் ராகுலுக்கு மீண்டும் எம்.பி. பதவியை உடனடியாக வழங்க வேண்டும் என்றாா்.

Leave A Reply

Your email address will not be published.