15 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்த நாட்டின் சில்லறை பணவீக்கம்….!

நாட்டின் சில்லறை பணவீக்கம், கடந்த 15 மாதங்களில் இல்லாத வகையில், ஆர்.பி.ஐ.-யின் உச்சவரம்பை தாண்டி 7.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அமைப்பு கடந்த ஜூலை மாதத்திற்கான சில்லறை பணவீக்கத்தின் தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் மாதம் 4.81 சதவிகிதமாக இருந்த சில்லறை பணவீக்கம், கடந்த மாதம் அதிரடியாக உயர்ந்து 7.4 சதவிகிதமாக பதிவாகி உள்ளது.இதில், நகர்புற பணவீக்கம் 7.20 சதவீதமாகவும், கிராமப்புற பணவீக்கம் 7.63 சதவிகிதமாகவும் உள்ளது. கடந்த மாதம் தக்காளியின் விலை உச்சத்தை தொட்டதே சில்லறை பணவீக்கம் பன்மடங்கு உயர்ந்ததற்கு பிரதான காரணமாக கருதப்படுகிறது.

தக்காளி மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக காய்கறிகளின் விலை கடந்த மாதம் 37.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதேபோன்று பருப்பு மற்றும் தானியங்களின் விலை 13 சதவிகிதம் உயர்ந்துள்ளது. நாட்டில் சில்லறை பண வீக்கம் 6 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வரம்பு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக கட்டுக்குள் இருந்த சில்லறை பணவீக்கம், தற்போது உச்சவரம்பை கடந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.