இலங்கை கடற்கொள்ளையர்களால் இந்திய மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை துறையில் இருந்து நேற்று மதியம் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர். ஆறுக்காட்டுதுறையில் இருந்து 22 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் நேற்று இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 15-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் 5 பைபர் படகுகளில் அங்கு வந்தனர்.

பின்னர் அந்த கடல் கொள்ளையர்கள் ஆறுகாட்டுதுறை மீனவர்களின் 4 விசைப்படகுகள் மற்றும் ஒரு பைபர் படகை அடுத்தடுத்து வழிமறித்து படகில் அத்துமீறி ஏறினர். தொடர்ந்து கத்தி, கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தமிழக மீனவர்களை தாக்கி படகில் இருந்த மீன்பிடி வலைகள், திசை காட்டும் கருவி, பேட்டரிகள், வாக்கி டாக்கி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்தனர்.

இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் பாஸ்கர், அருள்ராஜ், சுப்பிரமணியன், வெற்றிவேல், செந்தில்அரசன், மருது, வினோத் ஆகிய 7 பேர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் நள்ளிரவில் ஆறுக்காட்டுதுறை கடற்கரைக்கு திரும்பினர். தொடர்ந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் பாஸ்கர், அருள்ராஜ் ஆகிய இரண்டு மீனவர்கள் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் வேதாரண்யம் அடுத்த வெள்ளபள்ளம் கிராமத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர் அருள்செல்வம் என்பவரையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பைபர் படகில் இருந்த பொருட்களை பறித்து சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த அருள்செல்வம் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மொத்தம் ஒரே இரவில் 6 படகுகளை வழிமறித்து 8 மீனவர்களை கொடூரமாக தாக்கி ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி பொருட்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து இதுபோன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்களையும், வலைகளையும் பறித்து செல்வது வாடிக்கையாக நடந்து வருவதால் மீனவர்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களின் நலன் காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.