மகளின் ஆசைக்காக குழந்தையை கடத்திய பெற்றோர்.. பகீர் சம்பவம்

ரக்ஷா பந்தன் நாளையொட்டி ராக்கி கயிறு கட்ட ஆசைப்பட்ட மகளுக்காக பச்சிளம் குழந்தையை பெற்றோர் கடத்திய சம்பவம் தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது-

சஞ்சய் குப்தா (வயது 41), அனிதா குப்தா (வயது 36) என்ற தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகன் இருந்தார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி உயிரிழந்து விட்டார். இந்த தம்பதி தாகூர் கார்டன் அருகேயுள்ள ரகுபிர் நகரில் வசித்து வந்தனர். இந்நிலையில் எங்களுக்கு வியாழன் அன்று அதிகாலை 4.34 மணிக்கு குழந்தை ஒன்று கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது. இந்த சம்பவம் சத்தா ரயில் சவுக் பகுதியில் பாதசாரிகள் நடக்கும் இடத்தில் நடந்ததாக தகவல் அளித்தவர் கூறினார். தொடர்ந்து விசாரிக்கப்பட்டதில் சரியாக 3 மணிக்கு குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தோம். சுமார் 400 சிசிடிவி கேமராக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. சஞ்சய் என்பவர் பெயரில் பதிவு செய்யப்பட்ட பைக்கில் குழந்தை கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் முகவரியை பெற்றுக் கொண்டு ஆயுதங்களுடன் சுமார் 15 போலீசார் அங்கு சென்று சுற்றி வளைத்தோம். இறுதியாக நாங்கள் கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடித்தோம்.

அதனை கடத்திய சஞ்சய் மற்றும் அனிதா ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அவர்களது மகன் கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார். அவர்களது மகள் ரக்ஷா பந்தன் நாளையொட்டி சகோதரனுக்கு ராக்கி கட்ட ஆசைப்பட்டுள்ளார்.

அதற்காக ஓர் ஆண் வேண்டும் என்பதால் குழந்தையை சஞ்சய், அனிதா கடத்தியுள்ளனர். என்று தெரிவித்தனர். சஞ்சய் ஒரு டாட்டூ கலைஞராக இருக்கிறார். அவர் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் உள்ளன. கடத்தப்பட்ட குழந்தையின் தாய் கை கால்களை இழந்த மாற்றுத் திறனாளி. தந்தை கூலி வேலை பார்ப்பவர். அவர்கள் ப்ளாட் பாரத்தில் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.