“காலம் கடந்தும் எமக்குரிய தீர்வுகள் கிடைக்கவில்லை” – மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்துக்கான பிரதான நிகழ்வு இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தில் இருந்து ஆரம்பமான இந்த மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டப் பேரணி நகரின் பிரதான வீதிகள் ஊடாக சென்று காந்தி பூங்காவை அடைந்தது.

இந்தப் பேரணியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருந்தொகையான காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் காணாமல்போனவர்களின் புகைப்படங்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு கலந்துகொண்டனர்.

“காலம் கடந்தும் எமக்குரிய தீர்வுகள் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தும், “எங்கே எங்கே காணாமல்போன எமது உறவுகள் எங்கே” எனக் கோஷங்களை எழுப்பியவாறும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

“எமது உறவுகள் எமக்கு வேண்டும்”, “மதவாதம் வேண்டாம்” எனக் கோஷங்களை எழுப்பியும் இந்தப் பேரணியில் பெருந்தொகையான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் இந்நாள – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்பினர், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் மனைவி, பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.