13 ஐ ரணிலும் முழுமையாக அமுலாக்கமாட்டார்! – மைத்திரி ஆரூடம்

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்த ஜனாதிபதியும் (ரணில் விக்கிரமசிங்க) நடவடிக்கை எடுக்கமாட்டார் என்றே நான் நம்புகின்றேன்.”

– இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்னவென்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் எமது கட்சியின் நிலைப்பாட்டை அனுப்புமாறு ஜனாதிபதி செயலாளர் கோரி இருந்தார். அதற்கு நாம் பதில் கடிதம் அனுப்பினோம். முதலில் இது விடயம் தொடர்பில் அரசின் நிலைப்பாடு தெரியப்படுத்தப்பட வேண்டும் எனவும், அப்போது அதில் திருத்த வேண்டிய விடயங்கள், உள்ளடக்க வேண்டிய விடயங்கள் தொடர்பான கட்சியின் கருத்தை தெரிவிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

13 இல் உள்ள சில அதிகாரங்களை பகிர்வதில் பிரச்சினை இல்லை. பொலிஸ் அதிகாரம் தொடர்பில் சர்ச்சை உள்ளது. நீங்கள் (ஊடகவியலாளர்) கூறியதுபோல் 7 ஜனாதிபதிகள் கைவைக்காத விடயத்தை இந்த ஜனாதிபதியும் செய்யமாட்டார் (13 ஐ முழுமையாக அமுல்படுத்தல்) என்றே நான் நம்புகின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.