திருவிழாக்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை

முக்கிய வழிபாட்டு இடங்களிலும் வணக்கஸ்தலங்களிலும் இடம்பெறும் திருவிழாக்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க யாழ். நல்லூர், திருகோணமலை மற்றும் கிழக்கில் இருந்து கதிர்காம திருத்தலத்திற்கு பாத யாத்திரைகளை முன்னெடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய மற்றும் சமய கிரியைகளுக்கு முன்னுரிமையளித்து, முக்கிய புண்ணியஸ்தலங்களிலும் வழிபாட்டிடங்களிலும் இம்முறை திருவிழாக்களை ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, தியவடன நிலமே உள்ளிட்ட பஸ்நாயக்க நிலமேக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கண்டி தலதா மாளிகை மற்றும் கதிர்காமம்,தெவிநுவர உள்ளிட்ட தேவாலயங்களை முதன்மையாகக் கொண்டு இடம்பெறும் பெரஹரக்கள் கொரோனா ஒழிப்பிற்கு உதவும் வகையில், சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

வருடாந்த பெரஹரக்களை இம்முறை ஏற்பாடு செய்ய வேண்டிய முறை தொடர்பில் COVID ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பங்குபற்றுதலுடன் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, இம்முறை அனைத்து திருவிழாக்கள் மற்றும் பெரஹரக்களையும் குறைந்தளவிலான கலைஞர்களின் பங்குபற்றுதலுடனேயே நடத்த முடியும்.

அத்துடன், எந்தவொரு வழிபாட்டுத்தலங்களிலும் இடம்பெறும் திருவிழாக்கள் மற்றும் பெரஹெரக்களில் பங்குபற்றவோ பார்வையிடவோ பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.​

தலதா பெரஹர 10 நாட்களும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Comments are closed.