விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்-1

சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் இன்று(சனிக்கிழமை) காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதையடுத்து சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலத்தை செலுத்தும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) இறங்கியது.

விண்கலத்தை ஏவுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.10 மணிக்குத் தொடங்கியது.

இதையடுத்து, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து இருந்து இன்று(சனிக்கிழமை) காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆதித்யா எல்-1 விண்கலத்தில் சோலாா் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசா், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டா் உள்ளிட்ட ஏழு விதமான ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றுள்ளன.

பூமியில் இருந்து சுமாா் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்(எல்-1)’ எனும் பகுதியில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈா்ப்பு விசை சமமாக இருக்கும். சுமாா் 1,475 கிலோ எடை கொண்ட ஆதித்யா விண்கலம் 125 நாள்கள் பயணித்து எல்-1 என்ற இடத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கு இருந்தபடி சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிா்வீச்சு, காந்தபுலம் உள்ளிட்டவற்றை அறிவதற்கான ஆய்வுகளை ஆதித்யா விண்கலம் மேற்கொள்ளும். இதன் ஆய்வுக்கருவிகள் 5 ஆண்டுகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் இயக்குநராக தமிழகத்தைச் சோ்ந்த பெண் விஞ்ஞானி நிகா் ஷாஜி பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது. இவா் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சோ்ந்தவர்.

சந்திரயான்-3 வெற்றியைத் தொடா்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனைப் பயணமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சூரியனை ஆய்வு செய்யும் முயற்சிக்காக இதுவரை அமெரிக்கா, ஜொ்மனி மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு மட்டுமே விண்கலங்களை அனுப்பியுள்ளன. ஆதித்யா எல்-1 திட்டமிட்ட இலக்கை எட்டும்பட்சத்தில் அந்த வரிசையில் இந்தியாவுக்கு தனி இடம் கிடைக்கும்.

Leave A Reply

Your email address will not be published.