தற்போதைய அரசியல் தலைவர்களுக்கு ஜே.ஆர். சிறந்த முன்னுதாரணம்! – ஜனன தின நிகழ்வில் கரு தெரிவிப்பு. (Photos)

தற்போதைய அரசியல் தலைவர்களுக்கு ஜே.ஆர். ஜயவர்தன சிறந்த முன்னுதாரணம் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் 117 ஆவது ஜனன தின நிகழ்வு கொழும்பில் நேற்று (17) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கரு ஜயசூரிய மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கட்சி சார்பற்ற நபராக இந்த நிகழ்வில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நட்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை ஜே.ஆர். ஜயவர்தன முன்வைத்தார். அரச நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கருத்தையும் அவர் கொண்டிருந்தார். இதன் மூலம், நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதே அவரது நோக்கமாக இருந்தது. இந்தக் கூட்டு முயற்சிகளால்தான் இன்று சீனா பொருளாதார ரீதியாக வலுவாக உள்ளது.

ஜே.ஆர். ஜயவர்தன ஒரு முடிவை எடுத்தால், அந்த முடிவை மாற்றமாட்டார். அதை மாற்றினால், அது மக்கள் நல ஆட்சியை உருவாக்க மட்டுமே செய்யப்பட்டது.

அவருடைய ஆட்சியின் போது அவருடன் ஒரு நல்ல இளைஞர் கூட்டம் இருந்தது. இளைஞர்களுக்கு வாய்ப்பையும் அதிகாரத்தையும் கொடுத்தார். தற்போதைய அரசியல் தலைவர்களுக்கு ஜே.ஆர். ஜயவர்தன ஒரு சிறந்த முன்மாதிரி.” – என்றார்.

இந்நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர் பந்துல குணவர்தன, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை மற்றும் ஆய்வுக் குழுவின் தலைவர் கருணாசேன கொடித்துவக்கு, ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரன்களான பிரதீப் ஜயவர்தன, ஏ.ருக்சான் ஜயவர்தன, அம்ரிக் ஜயவர்தன, ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர்.ஏ.பி. தயாரத்ன, ஜே.ஆர். ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினர் சிரேஷ்ட பேராசிரியர் யு. ஜி. புஸ்வேவல மற்றும் ஜே. ஆர். ஜயவர்தன நிலைய உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.