இட்லி விற்பனை செய்யும் சந்திரயான் 3க்காக உழைத்த பொறியாளர்

சந்திரயான் 3 திட்டத்திற்கு உதவிய டெக்னிஷியன் தீபக் குமார் உப்ராரியா என்பவர் தற்போது இட்லி விற்பனை செய்து கொண்டிருக்கிறார். எதனால் அவருக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டது என்பது குறித்து வெளிவந்துள்ள காரணங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இதுதொடர்பான தகவல்களை பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சந்திரயான் 3 திட்டத்திற்காக விஞ்ஞானிகள், டெக்னிஷியன்ஸ் என பல ஆயிரக்கணக்கானோர் பணியாற்றியுள்ளனர். சந்திரயான் 3 திட்டத்தில் ஹெவி என்ஜினியரிங் கார்ப்பரேஷன் HEC (Heavy Engineering Corporation Limited) என்ற நிறுவனம் லான்ச் பேட் எனப்படும் ஏவுதளத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

மடக்கி வைக்கப்படும் நடைபாதைகள் ஸ்லைடிங் கதவு உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் ஏற்படுத்தி தந்துள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்றியவர்தான் தீபக் குமார் உப்ராரியா. டெக்னிஷியனாக வேலைபார்க்கும் இவருக்கு கடந்த 18 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று பிபிசி கூறியுள்ளது. இவரைப் போன்று 2800 ஊழியர்களுக்கும் ஹெவி என்ஜினியரிங் கார்ப்பரேஷன் நிறுவனம் ஊதியம் வழங்கவில்லையாம். வரலாற்று சிறப்பு மிக்க சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றிய தீபக் குமார், வறுமை காரணமாக இட்லி விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தை சேர்ந்த தீபக் குமார் தன்னுடைய நிலைமை குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- எனது வீட்டிற்காக நான் ரூ. 4 லட்சம் வரையிலும் கடனாளி ஆகியுள்ளேன். இதை நான் வாங்கியவர்களிடம் திருப்பி செலுத்த முடியாததால் அவர்கள் எனக்கு பணத்தை கடனாக தரவில்லை. இதையடுத்து எனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து செலவுகளை கவனித்தேன்.

இதன்பின்னர் நான் இட்லி விற்க தொடங்கினேன். ரூ. 300 – 400 வரையில் விற்பனையாகிறது. இதிலிருந்து ரூ. 50-100 வரை லாபம் கிடைக்கிறது. இதை வைத்து நான் குடும்பத்தை கவனிக்கிறேன். எனக்கு 2 மகள்கள். இருவரும் பள்ளிக்கு செல்கிறார்கள். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை என்னால் செலுத்த முடியவில்லை. இதற்காக பள்ளி நிர்வாகம் எனக்கு தினந்தோறும் நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.