சர்வதேச விசாரணைக்குப் பிள்ளையான் தயாராம்! – ஈஸ்டர் தாக்குதல் விவாதத்தில் அவரே தெரிவிப்பு.

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு நான் தயார்.”

இவ்வாறு பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவந்துள்ள சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்று வருகின்றது.

முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்றுமுன்தினம் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிடும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்தும் அதன்போது தெளிவுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இன்றைய பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா முன்வைத்து உரையாற்றினார்.

இதன்போது கருத்துரைத்த அவர், “2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினமன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதனுடன் தொடர்புடையவர்கள் இன்னும் கைது செய்யப்படாதுள்ளமை கவலையளிக்கின்றது” – என்று குறிப்பிட்டார்.

“இந்தத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்த போதிலும், அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சிலர் தடையாக இருந்துள்ளனர்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே, ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட அனைத்து சர்வதேச அமைப்புகளின் கண்காணிப்பில் இந்தத் தாக்குதல் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்” – என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா வலியுறுத்தினார்.

இதனிடையே குறுக்கிட்ட இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், தான் சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றார் என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.