152 கிலோ ஹெரோயின் கடத்திய ஐவருக்கு மரணதண்டனை! – கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.

ஹெரோயின் கடத்திய ஐவருக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

152 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை ரோலர் படகின் மூலமாக நாட்டுக்குக் கடத்தி வந்த ஐவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலல்லே நேற்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முறைப்பாட்டாளரினால் எவ்விதமான சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது எனத் தீர்மானித்துள்ள நீதிபதி, பிரதிவாதிகளின் இந்தச் செயற்பாட்டால் சமூகத்தில் ஏற்படும் ஆபத்தான நிலைமையைக் கருத்தில்கொண்டு பிரதிவாதிகளுக்கு இவ்வாறு தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்படுகின்றது எனவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

2019 நவம்பர் 2ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில் இலங்கைக்கு அண்மையில், இலங்கையின் கடல் எல்லையில், 152.34 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை மேற்படி ஐவரும் தம்வசம் வைத்திருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல் மற்றும் திட்டமிட்டமை ஆகியவற்றின் கீழ், பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.