மாகாண சபை முறையை நீக்குவது தொடர்பில் இன்னும் முடிவு இல்லை – ராஜபக்ச அரசு அறிவிப்பு

“மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பது தொடர்பில் அரசு இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.”

– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் ஜி.எஸ்.பீரிஸ் தெரிவித்தார்.

மாகாணச பை முறைமை நீக்கப்படவேண்டும் என முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“மாகாண சபை முறைமை தொடர்பில் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில் எந்தவொரு விடயமும் இல்லை. 20 ஐ நிறைவேற்றிய பின்னர் புதிய அரசமைப்பை உருவாக்கும் பணி ஆரம்பமாகும். அப்போது மாகாண சபை முறைமை தொடர்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பிலும் ஆழமாக ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும்.

நாட்டில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மாகாண சபைத் தேர்தல் நடைபெறவில்லை. மாகாண சபைகள் இயங்காமலேயே எல்லாம் நடைபெறுகின்றன. எனவே, மாகாண சபை முறைமை தேவைதானா என்ற கருத்தும் எழுந்துள்ளது. ஆனால், இது பற்றி அரசு இன்னும் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை.

வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கான தீர்வாகவே மாகாண சபை முறைமை கொண்டுவர்பட்டது. ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை நின்றது. தேர்தலை நடத்துமாறு கூட்டமைப்பினர் உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.