வெள்ளைக்கொடியுடன் வந்த எவரும் கொல்லப்படவில்லை! – கோட்டாவின் சதிவலை என்று பொன்சேகா தெரிவிப்பு.

“இறுதிப் போரின்போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என வெளியான தகவலின் பின்னணியில் எனக்கு எதிரான சூழ்ச்சியே இருந்தது.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் இறுதிப் போரை வழிநடத்திய இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“வெள்ளைக்கொடி விவகாரம் பிரெட்ரிகா ஜேன்ஸால் தயாரிக்கப்பட்ட கதையாகும். அவருக்குத் தூதுவர் பதவி வழங்கப்படும் என கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்திருந்தார் என அவரே கூறியிருந்தார். அவ்வாறு வழங்கப்படாததால்தான் அவர் கோபமடைந்து சென்றார். ஒப்பந்தத்தின் பிரகாரமே அவர் அந்தச் செய்தியைப் பிரசுரித்திருந்தார்.

நான் அப்போது ஜனாதிபதி வேட்பாளர், என்னைச் சந்திப்பதற்கு அவர் அலுவலகம் வந்திருந்தார், இப்படியொரு (வெள்ளைக்கொடி) சம்பவம் நடந்ததா எனக் கேட்டார், இதற்குப் பதிலளித்த நான், இது தொடர்பில் நீங்கள் கேட்பதற்கு முன்னர் இரு ஊடகவியலாளர்கள் என்னிடம் இது பற்றி கேட்டனர் எனக் கூறினேன். எவ்வளவுதான் நான் கூறினேன், ஆனால் அந்தக் கதையை அவர் அப்படியே மாத்தி எழுதிவிட்டார். ராஜபக்சக்களின் ஒப்பந்தத்தையே பிரெட்ரிகா வெளியிட்டிருந்தார்.

வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் எனக் கூறப்படுவது பொய்யான தகவலாகும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.