அதிகாலையில் மனைவியுடன் நடந்து சென்ற போது புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்

தமிழக மாவட்டம், திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பகுதியை சேர்ந்தவர் யுவசங்கர் (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் நவீனா (21). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

ஆனால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் 20 -ம் திகதி திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே பரேஸ்புரம் கிராமத்தில் கோபி என்பவருக்கு சொந்தமான முயல் பண்ணையில் சேர்ந்து இருவரும் பராமரிப்பு பணி செய்து வந்தனர்.

இந்நிலையில், அதிகாலை 4 மணியளவில் சொந்த ஊருக்கு செல்வதற்காக இருவரும் வீட்டின் பின்புறமாக பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றனர். அப்போது, முயல்பண்ணை அருகே அமைந்துள்ள தரையையொட்டி இருந்த கிணற்றில் யுவசங்கர் தவறி விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நவீனா, முயல்பண்ணை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். பின்பு, அவர் கொடுத்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் மற்றும் திருவாலங்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

சுமார் 8 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் யுவசங்கரின் உடலை மீட்டனர். பின்பு, இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.