பத்திரிகை விநியோகஸ்தர் மீது இன்று அதிகாலை வாள்வெட்டு.

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை அளவெட்டி வீதியில் பத்திரிகை விநியோகஸ்தர் மீது இன்று அதிகாலை வேளை வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகை ஒன்றில் பத்திரிகை விநியோகஸ்தராக ஈடுபட்டு வருகின்ற அளவெட்டியைச் சேர்ந்த பாலச்சந்திரன் மதனகரன் என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதிகாலை 4.30 மணியளவில் கந்தரோடை  அளவெட்டி வீதியில் இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியில் மருதமரத்தை அண்மித்த பகுதியில் காணப்படும் பாலத்தடியிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற பகுதி இரத்தைக் கறை படிந்து காணப்படுகின்றது.

குறித்த சம்பவம் வழிப்பறி முயற்சி என்று தாம் அறிந்ததாக கிராம மக்கள் சிலர் தெரிவிக்கின்ற போதிலும் வாள்வெட்டுக்கான சரியான காரணம் இன்னமும் வெளியாகவில்லை.

மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.