ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தல்! – ரணிலிடம் யோசனையை முன்வைக்க மொட்டு முடிவு.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆலோசனை நடத்தியுள்ளது.

இது தொடர்பில் கட்சிக்குள் பலகட்டப் பேச்சுக்கள் கடந்த சில நாள்களாக இடம்பெற்று வருகின்றன என்று அறியமுடிகின்றது.

நாட்டின் அபிப்பிராயத்தைத் துல்லியமாகப் பரிசோதிக்கப் பொதுத் தேர்தலைப் பயன்படுத்த முடியும் எனவும், அதன் பெறுபேற்றின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முடிவெடுக்க வேண்டும் எனவும் பொதுஜன பெரமுனவினர் ஆலோசித்துள்ளனர்.

இந்தக் கலந்துரையாடல்களில் எதிர்வரும் வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்கான எந்தத் தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை.

அமைச்சரவை மறுசீரமைப்பின் பின்னர் பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சில முறுகல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வரவு – செலவுத் திட்டத்தில் சில அமைச்சுகள் மீதான ஒதுக்கீடுகளை தோற்கடிக்கும் நோக்கில் பொதுஜன பெரமுனவுக்குள் குழுவொன்று செயற்பட்டு வருகின்றது என அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பித்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.