யாழ். பல்கலை பகிடிவதை விவகாரம்: 4 சிங்கள மாணவர்கள் இடைநிறுத்தம்

– இருவர் விடுதியிலிருந்து வெளியேற்றம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இணைய வழி ஊடாக பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பில் 2 பெண்கள் உள்ளிட்ட 4 சிங்கள மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு கற்றல் நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்று யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இணைய வழியில் மாணவர்கள் பாலியல் ரீதியிலான பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று தென்னிலங்கை ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தநிலையில் இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், மாணவ சிரேஷ்ட ஆலோசகர்கள், பேரவை உறுப்பினர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

அண்மையில் நடைபெற்ற பகிடிவதை தொடர்பில் உத்தியோகப்பற்ற முறையில் வெளியாகிய தகவலின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் 10 மணி நேரம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் முகாமைத்துவ வணிக பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு சிங்கள மாணவர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, குறித்த பகிடிவதை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய முதலாம் ஆண்டு சிங்கள மாணவர்கள் இருவர் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் எனவும், இனங்காணப்பட்ட மாணவர்கள் குறித்த விபரங்கள் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் பகிடிவதையில் ஈடுபடுகின்ற மாணவர்களுக்கு வழங்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ள தண்டனைகள் தொடர்பிலும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்த பல்கலைக்கழக நிர்வாகத்தினர், பகிடிவதைகளைப் கட்டுப்படுத்துவதற்கு சமூகத்தினதும் ஒத்துழைப்பையும் கோரியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.