மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அறுவர் கைது!

மட்டக்களப்பு, சித்தாண்டியில் மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பல்கலைக்கழக மாணவர்களை, பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று காலை 9 மணியளவில் சித்தாண்டி முருகன் ஆலயத்துக்கு முன்னால் ஒன்றுகூடியதை அடுத்து, அந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியாகப் போராட்டம் நடத்தும் பண்ணையாளர்களின் இடம் வரை சென்று, அங்கேயும் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்துள்ளனர்.

இதனையடுத்து, அந்தப் பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் முடிவுற்ற பின்னர், மாணவர்கள் பஸ்ஸில் கிழக்கு பல்கலைக்கழகத்தை நோக்கிப் பயணித்தபோது, பஸ்ஸைப் பின் தொடர்ந்து சென்ற சந்திவெளி பொலிஸார் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் வைத்து பஸ்ஸை நிறுத்தி, அதிலிருந்த 6 மாணவர்களைக் கைது செய்துள்ளனர்.

அந்த 6 மாணவர்களும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை, பொது வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் சந்திவெளி பொலிஸார் மேலும் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.