சீனத் தூதுவர் வவுனியாவுக்கு விஜயம்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் வவுனியாவுக்கு இன்று விஜயம் மேற்கொண்டு சீனாவின் உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

வவுனியா மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்த சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினரை மாவட்ட மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் வரவேற்றார். அவருடைய தலைமையில் சீன அரசால் வடக்கு மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சீன அரசின் வவுனியா மாவட்டத்துக்கான நிவாரண உதவித் திட்டத்தை வழங்கி ஆரம்பித்து வைத்தார்.

வவுனியா மாவட்டத்தின் வவுனியா, வவுனியா தெற்கு உள்ளடங்களாக 4 பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 500 குடும்பங்களுக்குச் சீனாவால் 7 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் முதல் கட்டமாக வழங்கப்படுகின்றது.

சீன பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த மக்களால் வழங்கப்படும் குறித்த உலர் உணவுப் பொருட்களை சீனா – இலங்கை பௌத்த நட்புறவுத் திட்டத்தின் கீழ் சீனத் தூதுவர் உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

இந்நிழ்வில் சீனத் தூதுவராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி, வவுனியா உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, வவுனியா மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர்கள், சீனத் தூதுவராலய அதிகாரிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.