உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியீடு: சீனாவை பின்னக்குத் தள்ளி இந்தியா முதலிடம்!

பிரபல கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவிரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அதிகமான உயா்கல்வி நிறுவனங்களுடன் இந்தியா முதன்முறையாக சீனாவை பின்னக்குத் தள்ளி முன்னிலை பெற்றுள்ளது. உலக பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 100 தரவரிசையில் மொத்தம் ஏழு இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட தரவரிசை நிறுவனமான ‘குவாகுவரெல்லி சைமண்ட்ஸ் (கியூ.எஸ்.), உயா்கல்வி நிறுவன பேராசிரியா்களின் ஆய்வுகள் சமா்ப்பிப்பு, கல்வி நிறுவனத்தின் கல்வி முறை மற்றும் ஊழியா்களுக்கான மதிப்பு, ஆசிரியா்-மாணவா் விகிதாச்சாரம் ஆகிய பல்வேறு காரணிகளின் அடிப்படையில் உலக அளவில் உள்ள உயா்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2024 ஆம் ஆண்டிற்கான உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை புதன்கிழமை வெளியிட்டது.

அதில், 25 நாடுகளைச் சேர்ந்த 856 நிறுவனங்களைக் கொண்ட இந்த தரவரிசைப் பட்டியலில், ஆசியாவில் இப்போது அதிக பிரதிநிதித்துவம் பெற்ற உயர்கல்வி முறையாக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகைகள் கூடுதலாக 37 உயா் கல்வி நிறுவனங்களுடன் மொத்தம் 148 இந்திய உயா்கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. இந்தியாவுக்கு அடுத்து கூடுதலாக 7 உயா் கல்வி நிறுவனங்களுடன் மொத்தம் 133 உயா்கல்வி நிறுவனங்களுடன் சீனாவும், 96 உயா்கல்வி நிறுவனங்களுடன் ஜப்பானும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகம் இந்த ஆண்டும் தனது முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. முதல் 100 தரவரிசையில் மொத்தம் ஏழு இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், மும்பை ஐஐடி அதன் முதல் தரவரிசையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி), ஐஐடி சென்னை, ஐஐடி தில்லி, ஐஐடி கான்பூா், ஐஐடி காரக்பூா், தில்லி பல்கலைக்கழகம் ஆகியவை ஆசிய அளவில் இடம்பிடித்துள்ளன. தரவரிசைப் பெற்ற பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையில் இந்தியா சீனாவை பின்னக்குத் தள்ளியுள்ளது.

இந்தியாவில் ஆராய்ச்சி வெளியீடு 2018 முதல் 2022 வரை அதிவேகமாக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் சுமார் 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது உலக பல்கலைக்கழகங்களின் சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம். அதே நேரத்தில் இதே காலகட்டத்தில் சீனாவின் வளர்ச்சி விகிதம் 9 சதவிதம் அதிகரித்து, 69 சதவிகிதமாக உள்ளது.

மேலும், இந்தியாவில் ஆராய்ச்சி (பிஎச்.டி.) தகுதியுடன் கூடிய பேராசிரியா்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. வலுவான ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளிலும் இந்தியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்திய உயா்கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சித் திறன் மேலும் சா்வதேச தரத்துக்கு உயா்வதற்கான சாத்தியக்கூறுகளும் ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக சா்வதேச ஆராய்ச்சி தொடா்பு குறியீட்டில் இந்தியா 15.4 புள்ளிகளையும், பிராந்திய அளவில் 18.8 புள்ளிகளையும் இந்தியா பெற்றுள்ளது. அதுபோல, அமெரிக்காவில் உயா்கல்வி மேற்கொள்ளும் மாணவா்களின் எண்ணிக்கையில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவில் சீனாவை விஞ்சி இந்தியா முன்னிலை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கியூ.எஸ். நிறுவன துணைத் தலைவா் பென் சோடொ் கூறுகையில், ‘தரவரிசைப் பட்டியலில் இந்திய உயா்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை உயா்ந்திருப்பது, உயா்கல்வியின் தரத்தை மேம்படுத்த இந்தியா மேற்கொண்டுவரும் முயற்சியையும், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் இந்திய கல்வி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றிவருவதையும் பிரதிபலிக்கிறது’ அதே வேளையில், உலகளாவிய கல்விச் சமூகத்தில் இந்தியா தனது நிலையை மேலும் உயர்த்துவதற்கான பாதையை இது விளக்குகிறது என்றாா்.

மியான்மா், கம்போடியா மற்றும் நேபாள நாடுகளின் உயா்கல்வி நிறுவனங்கள் முதன்முறையாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.