4 மாவட்டங்களில் இணையசேவைத் தடை நீக்கம் – மணிப்பூர் அரசு

மணிப்பூர் இனக்கலவரத்தால் பாதிக்கப்படாத நான்கு மாவட்டத் தலைமையகங்களில் இணையசேவைத் தடையை அம்மாநில அரசு நீக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ருல், சேனாப்தி, சன்டெல், டெமென்ங்லாங் ஆகிய நாகா இன மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சோதனையடிப்படையில் இந்த தடை நீக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இனக் கலவரத்தால் பாதிக்கப்படாத மாவட்டங்களில் இந்த சோதனை அடிப்படையிலான இணையசேவைத் தடையை நீக்குமாறு மாநில அரசுக்கு மணிப்பூர் உயர்நீதி மன்றம் வழிகாட்டியுள்ளது.

நான்கு மாவட்டங்களிலும் இணைய சேவையானது கடந்த செவ்வாய்க் கிழமையிலிருந்து தொடங்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உக்ருல் மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர், மாவட்டத் தலைமையகங்களில் மட்டும் இணைய சேவை துவங்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட சில மொபைல் டவர்கள் மட்டும் தற்போது இயங்குகின்றன. இணைய சேவை மிகவும் குறைந்த வேகத்தில் மட்டுமே கிடைக்கிறது. சோதனை அடிப்படியில் மறுசீரமைப்புப் பணிகள் துவங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மணிப்பூர் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் காசிம் வாசும் தெரிவிப்பதாவது, “கடந்த மே 3லிருந்து இங்கு இனக்கலவரங்கள் நடக்க ஆரம்பித்தன. இத்தனை நாட்களாக இந்த மாநிலம் வன்முறைகளின் பிடியில் தவித்துக்கொண்டிருந்தது. 180க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்” எனவும் கூறினார்.

இரு இன மக்களுக்கு ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த அதிருப்தியே சண்டைக்கு காரணமாக அமைந்தது. மெய்தி இன மக்கள் ‘பழங்குடியினர்’ பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான நடவடிக்கையே இந்தப் பெரிய சண்டை உருவாக மையப்புள்ளியாக அமைந்தது. பின்னர் அந்த நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதோடு பழங்குடியின மக்களைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

மணிப்பூரின் மொத்த மக்கள் தொகையில் 60% மெய்தியின மக்களும், 40% பழங்குடியின மக்களும் உள்ளனர். மெய்தியின மக்கள் பெரும்பாலும் இம்பால் பள்ளத்தாக்கு பகுதிகளில் வாழ்ந்துவருகின்றனர். பழங்குடியின மக்கள் மலை மாவட்டங்களிலும் வாழ்ந்துவருகின்றனர். அதில் நாகா மற்றும் குக்கி இன மக்களும் உள்ளடங்குவர்.

Leave A Reply

Your email address will not be published.