நோய்வாய்ப்பட்டிருந்த மத்தியப் பிரதேசத்தை மீட்டெடுத்தது பா.ஜ.க: நிர்மலா சீதாராமன்

போபாலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க ஆட்சியால் மத்திய பிரதேசம் எப்போதுமில்லாத வளர்ச்சியை அடைந்துள்ளதாகக் கூறியுள்ளார். பிமாரு (நோய்வாய்பட்ட) மாநிலமாக இருந்த மத்தியப் பிரதேசம் பா.ஜ.கவின் சிறந்த ஆட்சியினால் பீமிசல் (சிறந்த) மாநிலமாக மாறியுள்ளது எனக் கூறினார்.

பொருளாதாரம், கல்வி, மருத்துவம் என அனைத்திலும் பின்தங்கிய மாநிலத்தை பிமாரு மாநிலம் எனக் குறிப்பிடுவர். பிகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பிமாரு மாநிலங்களாக வகைப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அமைச்சர், 5ஜியில் முன்னேற்றம், பா.ஜ.கவின் நல்லாட்சி, மக்களின் நல்லெண்ணம், மோடி அவர்களின் உத்தரவாதமளிக்கும் பிரதான் மந்திரி கரிப் யோஜனா திட்டம் போன்ற நல்ல முன்னெடுப்புகளால் மட்டுமே இந்த மாநிலம் வளர்ச்சி கண்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்று பா.ஜ.க வெற்றிபெரும் எனவும் தெரிவித்தார். பா.ஜ.க-வால் நிலைநாட்டப்பட்ட சமூக நீதி, வேளாண் மற்றும் தொழிற்துறைகளின் வளர்ச்சிகளுக்கு இம்மாநில மக்களே சாட்சி எனவும் கூறினார்.

மத்திய பிரதேசத்தில் ஒரு ஆண்டுக்கான தனிநபர் வருமானம் 1.40 லட்சமாக அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் 2002-ல் 31.6 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கடன் 2023ல் 21.7 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.