லான்சாவின் புதிய கூட்டணி: கொழும்பில் இரகசியப் பேச்சு – 25 எம்.பிக்கள் பங்கேற்பு.

நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா உருவாக்கி வரும் கூட்டணியின் நகர்வுகள் மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்று வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகப் பாரிய கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா ஈடுபட்டு வருகிறார்.

புதிய கூட்டணிக்கான அலுவலகம்கூட அண்மையில் இராஜகிரியவில் திறக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

புதிய கூட்டணியில் இணைந்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்வரும் தேர்தலில் ஒன்றிணைந்து பாரிய அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற தொனியிலேயே லான்சாவின் நகர்வுகள் உள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பல்வேறு கட்சிகளுடன் நிமல் லான்சா தலைமையிலான குழு பரந்தப்பட்ட பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், கூட்டணி தொடர்பில் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான முக்கிய சந்திப்பு கடந்த புதன்கிழமை கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டம் மிகவும் இரகசியமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் கூட அருகில் இருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்கத் தயாராகவுள்ள அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 25 எம்.பிக்கள் வரை இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட எதையும் பகிரங்கப்படுத்தக் கூடாது என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி முதல் தமது பணிகளைத் தொடங்கக் கூட்டணியின் உறுப்பினர்கள் முடிவுகளை எடுத்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.

இதற்கிடையில், புதிய கூட்டணியின் அரசியல் குழு அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடியுள்ளது.

அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமல் சிறிபாடி சில்வா, நளின் பெர்னாண்டோ, லசந்த அழகியவண்ண, ஜகத் புஷ்பகுமார, அநுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் லான்சா, பிரியங்கர ஜயரத்ன மற்றும் கட்சி அலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது தற்போதைய அரசியல் விவகாரங்கள் மற்றும் வரவு – செலவுத் திட்டம் குறித்து பேசப்பட்டன என்றும் தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.