கிழக்கு ஆளுநராக நசீர்? செந்திலுக்கு ஊவா?

கிழக்கு மாகாண ஆளுநராகப் பதவி வகித்து வரும் செந்தில் தொண்டமானை நீக்கி அண்மையில் பதவி இழந்த முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட்டுக்கு அப்பதவியை வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று சிங்கள வார இதழ் ஒன்று பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த வார இதழின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

மாகாண ஆளுநர்கள் பலரை இடமாற்றம் செய்ய ரணில் அரசு திட்டமிட்டுள்ளது எனச் செய்தி கிடைத்துள்ளது. அதன்மூலம் அண்மையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் பதவி இழந்த முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட்டுக்குக் கிழக்கு மாகாண ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளது என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் பதவி வகிக்கும் செந்தில் தொண்டமான் ஊவா மாகாண ஆளுநராகவும், தற்போதைய ஊவா மாகாண ஆளு நரான ஏ.ஜே.எம். முஸம்மில் மேல் மாகாண ஆளுநர் பதவிக்கும் நியமிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, தற்போது மேல் மாகாண ஆளுநராகப் பதவி வகிக்கும் முன்னாள் விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலக்கவுக்குத் வெளிநாட்டுத் தூதுவர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என அறியமுடிகின்றது.

இந்த நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் அனைத்தையும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

– இப்படி அந்தச் சிங்கள வார இதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.