ராஜபக்ஷக்களைத் தூக்கிலிட வேண்டும்! – மஹிந்தவுக்குச் சஜித் அணி பதிலடி.

இலங்கையின் பொருளாதாரத்தைச் சீரழித்த ராஜபக்ஷக்களையும் அவர்களின் சகாக்களையும் தூக்கிலிட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

“நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டைச் சீரழித்தவர்கள் ராஜபக்ஷக்கள் என்று உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை நாம் வரவேற்கின்றோம். ஆனால், இந்தத் தீர்ப்புக்கு மதிப்பளிக்காத மஹிந்த ராஜபக்ஷ, நல்லாட்சி அரசில் இருந்த தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியினரே நாட்டைச் சீரழித்தவர்கள் என்று வெட்கம் இல்லாமல் கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரச் சீரழிவுக்குக் காரணமானவர்கள் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய ராஜபக்ஷக்களினதும் அவர்களின் சகாக்களினதும் குடியுரிமையைப் பறிக்க வேண்டும். அவர்களிடமிருந்து நட்டஈடு பெற வேண்டும். அவர்கள் திருடிய பணம் தற்போதும் அவர்களிடமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவர்களைச் சும்மாவிட முடியாது. அவர்களைக் கூண்டோடு தூக்கிலிட வேண்டும” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன மற்றும் சரத் பொன்சேகா ஆகிய எம்.பிக்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.