கொழும்பில் தமிழர்களை இலக்கு வைத்து அநீதி! – பொலிஸாரின் பதிவு நடவடிக்கைக்கு எதிராகச் சஜித் கண்டனம்.

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்களை இலக்கு வைத்துப் பொலிஸார் மேற்கொள்ளும் அநீதியான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் இன்று (11) வலியுறுத்தினார்.

கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்டி, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி மற்றும் மோதர ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள தமிழ் மக்களை குறிவைத்து மீண்டுமொரு பதிவு நடவடிக்கை நடந்து வருகின்றது. இந்த அனைத்து பதிவு விபர பத்திர ஆவணங்களும் சிங்கள மொழியிலேயே வழங்கப்படுகின்றன. நாட்டின் அரசமைப்பை மீறி சிங்கள மொழியில் மட்டுமே இந்த விபர பதிவுப் பத்திர ஆவணங்களைப் பொலிஸார் வழங்குகின்றனர். அது தவறான விடயம் என்றும், ‘ரணில் – பொலிஸ் இராஜ்ஜியம்’ நடக்கின்றது எனச் சந்தேகம் எழுகின்றது என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று சபையில் சுட்டிக்காட்டியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நடவடிக்கை தவறானது. ஆட்களைப் பதிவு செய்ய நடைமுறையொன்று உள்ளது. இந்தப் பதிவு முறைக்கு குறித்த நடைமுறையையே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதற்காகப் பொலிஸ் முறையைப் பயன்படுத்தி அநீதி இழைக்கக் கூடாது.

நாட்டின் தேசிய பாதுகாப்பைப் போலவே குற்றங்களைக் குறைப்பதும் முக்கியம் என்றாலும், ஏதேனும் நியாயமற்ற முறை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது. எந்தவொரு வேலைத்திட்டத்திலும் வெளிப்படைத்தன்மையும் ஜனநாயகமும் நிலைநாட்டப்பட வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.