லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி – பணமாலை அணிவித்து மீனவர்கள் போராட்டம்!

லஞ்சம் கேட்ட அதிகாரிக்கு பணமாலை அணிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெலுங்கானா மாநிலம் கல்வ கோட்டையில் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரியாக இருப்பவர் தாமோதர். இவரிடம், அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், ‘மீனவர் சங்கம்’ அமைக்க வேண்டி அணுகியுள்ளனர்.

ஆனால் தாமோதர் நீண்ட நாட்களாக அனுமதி தராமல் அலைக்கழித்து வந்துள்ளார். மேலும், சங்கம் அமைக்க அனுமதி வழங்குவதற்கு ரூ.50,000 லஞ்சம் தர வேண்டும் என்றும் மீனவர்களிடம் தாமோதர் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், மீனவர் சங்கத் தலைவர் பரவீன் தலைமையில், மீன்வளத்துறை அதிகாரி தாமோதரின் அலுவலகத்திற்கு சென்றனர்.பின்னர் அங்கிருந்த தாமோதரை அலுவலகத்திற்கு வெளியே இழுத்து வந்து ரூபாய் நோட்டு மாலையை அவருக்கு அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தாமோதர் “எனக்கு பின்னால் ஒரு அமைச்சர் இருக்கிறார், இதனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது” என மிரட்டி உள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் யாஸ்மின் பாஷாவிடம் மீனவர்கள் புகார் அளித்த நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.