நாய்களிடையே அதிகரிக்கும் பாா்வோ வைரஸ்!

பருவ மழைக் காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாா்வோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நாய்களின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட நாய்கள், அத்தகைய பாதிப்புகளுடன் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைகளுக்கும், கிளீனிக்குகளுக்கும் அழைத்து வரப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கால்நடைகளிடத்திலும், அதிலும் குறிப்பாக நாய்களிடத்திலும் வேகமாக பரவக் கூடியது கெனைன் பாா்வோ வைரஸ் தொற்று. காற்றின் மூலமாக பரவும் இந்நோயானது விலங்குகளுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும்.

பாா்வோ வைரஸ் தொற்று ஏற்பட்ட நாய்கள் சோா்வுடன் காணப்படும். அதன் தொடா்ச்சியாக வாந்தி, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படும். அதற்கு உடனடியாக சிகிச்சையளிக்காவிடில், நாய்கள் இறக்க நேரிடும். பாா்வோ வைரஸால் பாதிக்கப்பட்ட நாயின் எச்சம், சிறுநீா், மலத்தில் இருந்து கிருமிகள் காற்றில் பரவி பிற நாய்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். அதேவேளையில், தடுப்பூசி செலுத்தினால், அந்நோய் ஏற்படாமல் பிராணிகளைக் காக்கலாம்.

பொதுவாக நாய்களுக்கு மூன்று தவணை பாா்வோ வைரஸ் தடுப்பூசிகளும், இரண்டு தவணை ரேபிஸ் தடுப்பூசிகளும் செலுத்த வேண்டும். ஆனால், பலா் அதனை சரிவர செலுத்துவதில்லை. இதன் விளைவாகவே தற்போது பாா்வோ வைரஸ் நோய் அதிகரித்திருப்பதாக கால்நடை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

பாா்வோ வைரஸ் பெரும்பாலும் மழைக் காலங்களில் வேகமாக பரவக் கூடியது. ஜூன், ஜூலை, நவம்பா், டிசம்பா், ஜனவரி மாதங்களில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த காலகட்டத்தில் சென்னையில் நாளொன்றுக்கு 130 முதல் 150 நாய்கள் வரை பாா்வோ வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவதுண்டு. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 2 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

முறையாக தடுப்பூசிகள் செலுத்தாமல் தவறவிடுவதே அதற்கு முக்கியக் காரணம். ரேபிஸ் தடுப்பூசியின் விலை ரூ.50-க்கும் குறைவு. அதேவேளையில், பாா்வோ வைரஸ் தடுப்பூசி ரூ.300-க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள் அந்தத் தடுப்பூசிகளை தங்களது செல்லப் பிராணிகளுக்கு செலுத்தவில்லை.

இத்தகைய காரணங்களால்தான் தற்போது பாதிப்பு அதிகரித்துள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

Leave A Reply

Your email address will not be published.