தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. போட்டி மூன்று நாட்களுக்குள்ளே முடிவடைந்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 131 மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய ரோகித் சர்மா, இந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு தகுதியே இல்லாமல் இருக்கிறோம்.

எங்களுக்கு முதலில் பேட்டிங் செய்யும் சூழல் ஏற்பட்டது. கே எல் ராகுல் மட்டும்தான் அபாரமாக விளையாடி ஒரு கௌரவமான இலக்கை எட்ட வைத்தார். எங்களுடைய பவுலர்கள் ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தவில்லை. இன்று பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதிலும் நாங்கள் சரியாக விளையாடவில்லை. ஒரு டெஸ்ட் போட்டியை நீங்கள் வெல்ல வேண்டும் என்றால் ஒரு அணியாக இணைந்து விளையாட வேண்டும்.

அதை நாங்கள் இன்று செய்யவில்லை. தென்னாப்பிரிக்க மண்ணிற்கு ஏற்கனவே வந்து விளையாடியவர்களுக்கு இந்த ஆடுகளத்தில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். இதனால் ஒவ்வொருவரும் ஒரு திட்டத்தை நாங்கள் வகுத்து வைத்திருந்தோம். எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால்கள் அளிக்கப்பட்டது. சூழலுக்கு ஏற்ப எங்களை நாங்கள் மாற்றிக் கொள்ளவில்லை.

இந்த ஆடுகளம் பவுண்டரி அடித்து ஆடக்கூடிய ஆடுகளமாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்க வீரர்கள் எப்படி அடித்து ஆடினார்கள் என்பதை பார்த்தாலே நமக்கு புரியும். எதிரணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பது குறித்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் பேட்டிங்கில் இரண்டு இன்னிங்ஸிலும் சரியாக விளையாடவில்லை. அதனால் தான் நாங்கள் தோல்வி அடைந்திருக்கிறோம்.

இந்த போட்டியில் ஒரு நல்ல விஷயம் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. போட்டி மூன்று நாட்களில் முடிந்து விட்டது. ஆனால் கே எல் ராகுல் இந்த ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதை காட்டினார். எங்களுடைய பவுலர்கள் இதற்கு முன்பு இங்கு அதிகமாக வந்தது இல்லை.

எனவே நான் அவர்களை கடுமையாக விமர்சிக்க விரும்பவில்லை. இனி அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஒரு அணியாக நாங்கள் ஒருங்கிணைந்து வெற்றி பெறுவதற்கான காரணத்தை யோசிப்போம். அடுத்த டெஸ்டுக்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.