பண்டாரவளையில் அடக்கம் செய்யப்பட்ட யுவதியின் சடலத்தைத் தோண்டி எடுத்த விஷமிகள்!

பண்டாரவளை, பிந்துனுவெவ பகுதியிலுள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட யுவதி ஒருவரின் சடலம் மீளத் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று பண்டாரவளை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பிந்துனுவெவ, படுலுகஸ்தென்ன பகுதியில் வாழ்ந்த 25 வயதுடைய ரஷ்மிகா நதிஷா என்ற யுவதி நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்த நிலையில் அவரின் சடலம் கடந்த 4 ஆம் திகதி அடக்கம் செய்யப்பட்டது.

எனினும், குறித்த யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மயானப் பகுதியில் போடப்பட்டுள்ளதை யுவதியின் உறவினர் ஒருவர் இன்று கண்டுள்ளார். அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தார்.

அதன்பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் குழுவொன்று, விசாரணைகளை நடத்தியது.

யுவதி புதைக்கப்பட்ட இடத்தில் குழி மீளத் தோண்டப்பட்டு, சவப்பெட்டியின் மேல் பகுதி திறக்கப்பட்டு, உள்ளே இருந்த சடலம் வெளியே எடுக்கப்பட்டு ஓரமாக வீசப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ஆடைகள் களையப்பட்டு சடலம் நிர்வாணமாகவே இருந்தது.

பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் ஆலோசனையின் பிரகாரம், இது தொடர்பில் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்துக்குத் தகவல்கள் வழங்கப்பட்டு, மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பதில் தலைமையகப் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.கே.பண்டார தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.