மகனைக் கொன்ற வழக்கு: சுசனாவுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு!

தனது சொந்த மகனையே கொன்றதாகக் கூறப்படும் சுசனா சேத்தின் போலீஸ் காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து கோவா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 8ஆம் தேதி சுசனா சேத் (39) என்பவர் தனது நான்கு வயது மகனைக் கொன்று, அந்த உடலை பையில் அடைத்து டாக்ஸியில் கொண்டு சென்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை ஆறு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து 6 நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த சுசனா சேத், இன்று (திங்கள்கிழமை) கோவா குழந்தைகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை இன்னும் முடிவடையாததால், அவரது காவலை நீட்டிக்குமாறு போலீசார் கோரினர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள சுசனா சேத் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனவே அவரை விசாரிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்பதாலும், அவரது டிஎன்ஏ மாதிரியை சோதிப்பது போன்ற பிற பணிகளையும் செய்ய வேண்டியுள்ளதாலும் அவரது காவலை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதையடுத்து சுசனா சேத்தின் போலீஸ் காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து கோவா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சுசனாவின் கணவர் வெங்கட் ராமனின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் பணி ஏற்கனவே முடிந்துவிட்டதாக காவல்துறையினர் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.