தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று போராட்டம்

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கியதைக் கண்டித்தும், தமிழர் பாரம்பரிய காணிகளை புராதன பூமி என்ற பெயரில் கையகப்படுத்துவதை நிறுத்துமாறு கோரியும் மட்டக்களப்பு – பன்குடாவெளியில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

பிரதேச மக்களினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அரசியல்வாதிகள், விவசாயிகள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இன நல்லுறவுக்குப் பாதகம் ஏற்படும் வகையில் செயற்படும் தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், அரச அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், பொலிஸார் கடமையைச் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் எனக் கோஷமிட்டு பதாதைகளை ஏந்தி தொல்பொருள் திணைக்களத்தால் அடையளப்படுத்தபட்ட காணியின் முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது:-

ஞானமுத்து அன்னபூரணம் என்பவருக்குச் சொந்தமான ஒன்பது ஏக்கர் வயற்ல் காணியை 1964ஆம் ஆண்டு அவரது மருமகள்களான தருமலிங்கம் ராணியம்மா, தருமலிங்கம் யோகமலர், தருமலிங்கம் பரமேஸ்வரி ஆகியோருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டு அவர்களினால் அன்று முதல் விவசாயம் செய்கை பண்ணப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் குறித்த பகுதியில் புராதன சிங்கள பௌத்த சின்னங்கள் பௌத்த விகாரை இருந்தது எனக் கூறி அப்பிரதேசத்தில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு தொல்பொருள் அடையாளங்கள் காணப்பட்ட பகுதியில் மாத்திரம் அடையாளமிடப்பட்டு மிகுதி பகுதியில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் குறித்த இடத்துக்கு வந்து, “விகாரைக்குரிய காணி 200 ஏக்கர் உள்ளது. காணிக்கு உரிமை கோருவோர், விவசாயம் செய்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்” என்று மிரட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை வருமாறு அழைத்து அங்கு வந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மூவரைக் கடுமையாகத் தாக்கி தகரக் கொட்டில் ஒன்றுக்குள் சிறைப்பிடித்து வைத்திருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கரடியனாறு பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தேரருடன் கலந்துரையாடி தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை மீட்டுள்ளனர்.

தினமும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்யும் அத்துமீறல்களைக் கண்டித்தும், அதிகாரிகளைத் தாக்கியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.