அமைச்சர் கெஹலியவுக்கு வெளிநாடு செல்லத் தடை சி.ஐ.டியில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவை நாளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவுகளை இன்று பிறப்பித்துள்ளது.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகவிருந்தார். எனினும், மற்றுமொரு வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக வேண்டியிருந்தமையால் அவர் ஆஜராகத் தவறியிருந்தார். இதனால் அமைச்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வேறு திகதி கோரியிருந்தார்.

இந்நிலையிலேயே கொழும்பு, மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றத்தால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்பாகச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 10 சிவில் சமூக ஆர்வலர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் அவர்களை இன்று பிணையில் விடுவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவைக் கைது செய்யுமாறு கோரி சிவில் சமூக ஆர்வலர்கள் நேற்று மாலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்பாகச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டபோதே கைது செய்யப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.