தமக்குரிய ஓய்வுநாளைத் தவிர ஆறு நாட்களும் கடமைபுரிய வேண்டும்.

நாட்டின் அனைத்து கிராம‍ சேவகர்களும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணிவரை தமது அலுவலகங்களில் அவசியம் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும் தமது அலுவலங்களில் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

கிராமசேவகர்களினால் ஆற்றப்பட வேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புக்களை முறைமைப்படுத்தும் சுற்றுநிரூபம் ஒன்றும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த சுற்று நிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அதுமாத்திரமன்றி கிராமசேவகர்கள் தமக்குரிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதை முறைமைப்படுத்தும் விதமாக உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் உள்நாட்டு அலுவல்கள் தொடர்பான 16/2020 இலக்க சுற்றுநிருபம் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதன்படி கிராமசேவகர்கள் தமக்குரிய ஓய்வுநாளைத் தவிர ஏனைய 6 நாட்களும் 24 மணிநேரமும் தமக்குரிய கிராமசேவகப்பிரிவில் உரிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்குக் கடமைப்பட்டுள்ளனர்.

அத்தோடு செவ்வாய்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.15 மணிவரையும் சனிக்கிழமைகளில் நண்பகல் 12.30 மணிவரையும் மக்களுக்கு அவசியமான சேவைகளை வழங்குவதற்காக தமது அலுவலகத்தில் இருக்கவேண்டும்.

திங்கட்கிழமைகளில் பிரதேச செயலகக்கூட்டங்கள் மற்றும் ஏனைய 3 நாட்களில் ஒரு நாளை தமக்கான ஓய்வுநாளாகவும் ஏனைய இருநாட்களை அலுவலக கடமைகளுக்காகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இவையனைத்தும் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்பதுடன், இதுகுறித்து தத்தமது பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு உட்பட்ட மக்களுக்கு கிராமசேவகர்களால் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.