இந்தியத்தமிழர்/மலையகத்தமிழர்” என்ற சமநிலை அடையாளத்தை ஏற்றுக்கொண்டு, விவாதத்தை எதிர்காலத்துக்கு ஒத்தி வையுங்கள்.

“இந்தியத்தமிழரா, மலையகத்தமிழரா” என்ற விவாதத்தை இப்போது ஒத்தி வைத்து விட்டு, இம்முறை ஜனத்தொகை கணக்கெடுப்புக்கு “இந்தியத்தமிழர்/மலையகத்தமிழர்” என்ற சமநிலை அடையாளத்தை ஏற்றுக்கொள்வது பொருத்தமானது என எண்ணுகிறேன். அடுத்த பத்தாண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ஜனத்தொகை கணக்கெடுப்பின் போது, காலம் ஒரு அடையாளத்தை காட்டும். “தமிழர்” என்ற பொது தமிழ் இன அடையாளமாக இருக்கலாம். அல்லது இன அடையாளங்களே மறைந்து “இலங்கையர்” என்ற பொது நாட்டு அடையாளமாகவும் இருக்கலாம்.

என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

“குடிசன கணக்கெடுப்பில் மலையக தமிழ் அடையாளத்திற்கான கூட்டிணைவு” அமைப்பினர், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனை சந்தித்து தமது கோரிக்கை ஆவணங்களை வழங்கி உரையாடினர். தமது இல்ல்லத்தில் நடைபெற்ற இந்த உரையாடலின் போது மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

நேற்று என்னை சந்தித்த, மலையக சிவில் அமைப்பினருடன் இது தொடர்பில் காத்திரமான கலந்துரையாடல் நடைபெற்றது. சிவில் சமூக நண்பர்களின் முன்னெடுப்பு ஒரு சமநிலைப்பாட்டை அடைந்துள்ளது பற்றிய எனது மகிழ்ச்சியை தெரிவித்தேன். இதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர் மற்றும் அனைத்து தமிழ் பேசும் மக்கள், இலங்கை மக்கள் மத்தியிலும் பிளவுகளை ஏற்படுத்த முடியாது. இது இலங்கை நாட்டவர் என்ற அடையாளத்திற்கு உள்ளே வரும் ஒரு சட்டப்பூர்வமான உள்ளக அடையாளம் என்பதை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபர திணைக்களம் இது தொடர்பில் எடுத்துள்ள முற்போக்கு நிலைபாட்டை கணக்கில் எடுத்து, உத்தேச கணக்கெடுப்பு ஆவணங்களில் உரிய அடையாளம் இடம்பெறுவதற்கான உரிய அறிவுறுத்தல்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கிடைக்கப்பட்ட வேண்டும் என என்னுடன் தொலைபேசியில் உரையாடிய தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபர திணைக்கள பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் எமது கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எமது நிலைபாட்டை தெரிவித்திருந்தேன். இதற்கு அவசியமான அறிவுறுத்தல்களை, தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபர திணைக்களத்துக்கு வழங்குவதாக அவர் உறுதியளித்தார். இதை ஒருங்கிணைத்து மேல் நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயகவிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறினேன்.

இந்நிலையில், “இந்தியத்தமிழரா, மலையகத்தமிழரா” என்ற விவாதத்தை இப்போது ஒத்தி வைத்து விட்டு, இம்முறை ஜனத்தொகை கணக்கெடுப்புக்கு “இந்தியத்தமிழர்/மலையகத்தமிழர்” என்ற சமநிலை அடையாளத்தை ஏற்றுக்கொள்வது பொருத்தமானது என எண்ணுகிறேன். அடுத்த பத்தாண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ஜனத்தொகை கணக்கெடுப்பின் போது, காலம் ஒரு அடையாளத்தை காட்டும். அது, “தமிழர்” என்ற பொது தமிழ் இன அடையாளமாக இருக்கலாம். அல்லது இன அடையாளங்களே மறைந்து “இலங்கையர்” என்ற பொது நாட்டு அடையாளமாகவும் இருக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.