செப்டெம்பர் அல்லது ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தல்!

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அதன் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக 40 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேற்று அழைக்கப்பட்டிருந்தன. அதற்கமைய பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அதில் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துரைத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, தேர்தல்களை நடத்துவதற்கு நிதி சம்பந்தமாக காணப்பட்ட பிரச்சினை தற்போது இல்லாமல் போயுள்ளது என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.